எகிப்திய ஜனாதிபதி சிசிக்கு எதிராக நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் : இவற்றின் முடிவே எகிப்தினதும் மத்திய கிழக்கினதும் தலைவிதியைத் தீர்மானிக்கும் – லத்தீப் பாரூக்

Spread the love

எகிப்தில் சகல நிலைகளையும் சேர்ந்த மக்கள் நாடு தழுவிய ரீதியில் வீதிகளில் இறங்கி கடந்த செப்டம்பர் மாதம் 20ம் திகதி முதல் ஜனாதிபதி சிசிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஏகிப்தில் இன்றைய ஆட்சியின் கீழ் வீதிகளில் இறங்கி போராடுவது என்பது ஒன்றில் சிறைவாசத்தை அல்லது மரணத்தை பெற்றுத் தரும் என்ற அச்ச நிலையையும் பொருட்படுத்தாமல் ஜனாதிபதி அப்துல் பத்தாஹ் சிசிக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

2013 ஜுலையில் இராணுவ சதிப் புரட்சி மூலம் எகிப்தில் ஆட்சியைக் கைப்பற்றியவர் தான் சிசி. கடந்த அறுபது வருட காலத்தில் எகிப்தில் சுதந்திரமான தேர்தல் மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட்டு முதற் தடவையாக ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மொஹமட் முர்ஷியை பதவி கவிழ்த்துவிட்டே சிசி பதவிக்கு வந்தார். அவ்வாறு பதவிக்கு வந்து 24 மணிநேரத்தில் மீண்டும் எகிப்தில் இராணுவ பொலிஸ் அராஜக ஆட்சி அரங்கேற்றப்பட்டது.

ஜனாதிபதி முர்ஷி அந்த நாட்டு மக்களின் நம்பிக்கையாகத் திகழ்ந்தவர். அவரின் பதவி நீக்கம் அந்த நாட்டு மக்கள் தமது எதிர்காலத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கையை முற்றாக சிதைத்துத் தள்ளியது. முர்ஷி சார்ந்திருந்த இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கானோர் எகிப்திய இராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டனர். அவர்களில் பலர் சித்திரவதை செய்து கொல்லப்பட்டனர். தாம் மிகவும் நேசித்த தமது தலைவர் முர்ஷியை ஆதரித்ததை தவிர வேறு எந்த குற்றமும் அவர்கள் புரியவில்லை.

சிசியின் ஏழு வருட கால ஆட்சியில் கற்பழிப்பு கரைபுரண்டு ஓடியது. ஆடக்குமுறையும் அச்சமும் தலைவிரித்து ஆடியது. அரசியல் கைதிகள் மீதான சித்திரவதை எல்லை மீறியது. சட்டத்துக்கு அப்பாற்பட்ட மரணங்கள் சர்வ சாதாரணமாயின. மக்களின் அடிப்படைத் தேவையான வீடுகள் கட்டப்படுவதற்கு பதிலாக ஏற்கனவே அவர்கள் வாழ்ந்து வந்த வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. இவ்வாறான ஒரு மோசமான பின்னணியில் தான் மக்கள் தம்மைச் சூழவுள்ள அச்சங்களையும் ஆபததுக்களையும் பொருட்படுத்தாமல் சிசிக்கு எதிராக வீதிகளில் இறங்கி உள்ளனர். இந்த மக்கள் ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமை தாங்கும் மொஹமட் அலி என்பவர் ஸ்பெயினில் அஞ்சாதவாசம் இருந்தவாறு மக்களை நெறுப்படுத்தி வருகின்றார்.

காலஞ்சென்ற ஜனாதிபதி முர்ஷி, அமரிக்காவும், ஐரோப்பாவும், இஸ்ரேலும், சவூதி அரேபியாவும், ஏனைய வளைகுடா நாடுகளையும் நடுக்கம் கொள்ள வைக்கும் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் பிரதிநிதி. அதனால் தான் இந்த சக்திகள் ஒன்றிணைந்து தாம் மிகவும் நேசிக்கும் இஸ்ரேலி;ன் கரங்களைப் பலப்படுத்தவும் அந்தப் பிராந்தியத்தில் இஸ்லாத்தின் எழுச்சியை மழுங்கடிக்கவும் முர்ஷியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தன. இந்த ஐரோப்பிய அமெரிக்க இஸ்ரேலிய நாசகார சக்திகள் முhஷியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் தமது சதித் திட்டத்தை அரங்கேற்றும் மகத்தான பொறுப்பை தமது நீண்ட கால நண்பனான சவூதி அரேபியா குவைத் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் என்பனவற்றிடமே ஒப்படைத்தன.

அதன்படி எகிப்தில் முர்ஷிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை அந்த நாட்டின் இராணுவம் முன்னின்று திட்டமிட்டு அரங்கேற்றியது. இதன் வெற்றியை உறுதி செய்யும் வகையில் இஸ்ரேலும் அமெரிக்காவும் கோடிக்கணக்கான டொலர்களைக் கொட்டித் தீர்த்தன. சவூதி அரேபியா, குவைத் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் என்பன தமது பங்காக இந்த இராணுவ சதிப்புரட்சியின் வெற்றிக்கு 11 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன் மூலம் எகிப்தில் செயற்கையான உணவுத் தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு உற்பட பல்வேறு தட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு குழப்ப நிலை உருவாக்கப்பட்டது.
ஏண்ணெய் வளம் கொண்ட ஷேக்மார் தமது அமெரிக்க, ஐரோப்பிய இஸ்ரேலிய எஜமானர்களின் பேச்சைக் கேட்டு தமது சொந்த மக்களுக்கு எதிராகவே இவ்வாறான நிலைமைகளை ஏற்படுத்தினர். தமது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதும் இத்தனை காலமும் தமது மக்களை ஏமாற்றி சம்பாதித்து அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தாம் சேமித்து வைத்துள்ள செல்வங்களைப் பாதுகாத்துக் கொள்வது மட்டுமே இவர்களின் குறிக்கோள்களாக இருந்தன.

அமெரிக்க சியோனிஸ்ட்டுகள் என வெளிப்படையாக அறியப்பட்டுள்ள இந்தப் பூகோளத்தில் மிகவும் அடக்குமுறையான ஆட்சியை நடத்தி வருகின்ற சவூதி அரேபியா இஸ்லாமியப் போர்வையில் உலா வரும் ஒரு குள்ள நரியாகும். இவர்கள் தான் எகிப்திய மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி முர்ஷியின் ஆட்சியைக் கவிழ்ப்பதில் முற்று முழுதாக பின்னணியில் இருந்து செயல்பட்டார்கள். இதற்கு முக்கிய காரணம் அந்த அரசு மக்களால் தமது விருப்பத்தின் படி தெரிவு செய்யப்பட்ட ஜனநாயகமும் இஸ்லாமும் இரண்டறக் கலந்திருந்த ஒரு ஆட்சியாக காணப்பட்டமையாகும்.

இவ்வாறுதான் அந்த மக்களுக்கு நரகத்தின் வாயிலை சவூதி அரேபியா திறந்து விட்டது என்று கூறலாம். ஏகிப்தில் நிறுவப்பட்ட இஸ்லாமிய ஆட்சியை கவிழ்ப்பதில் சவூதி அரேபியா காட்டிய ஈடுபாட்டைக் கண்டு முழு உலக முஸ்லிம்களும் வியப்பில் ஆழ்ந்தனர்.

பதவி கவிழ்க்கப்பட்டு கைது செய்யப்பட்ட ஜனாதிபதி முர்ஷி தினசரி 23 மணிநேரம் தனிமைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டார். ஒரு மணிநேரம் மட்டும் உடல் பயிற்சிக்காக வெளிச்சத்தைக் காண அவருக்கு அனுமதி கிடைத்தது. ஏனைய கைதிகளைக் காணக் கூட அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

கொங்கிரீட் தரையில் படுக்குமாறு அவர் வற்புறுத்தப்பட்டார். ஓரிரண்டு போர்வைகள் மட்டுமே அவருக்கு அளிக்கப்பட்டன. டின்னில் அடைக்கப்பட்ட அழுகிப் போன உணவு தான் அவருக்கு அளிக்கப்பட்டது. வாசிப்பதற்கு புத்தகங்கள் எதுவும் அவருக்கு வழங்கப்படவில்லை. வேறு பத்திரிகைகள், சஞ்சிகைகள், எழுதுவதற்கான வசதிகள் வானொலி வசதிகள் என எதுவுமே அவருக்கு அளிக்கப்படவில்லை. அரசாங்கத்தின் கவனத்துக்கு பல்வேறு தரப்பினரால் இந்த விடயங்கள் கொண்டு வரப்பட்ட போதிலும் அவை எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்தன.

அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த விதம் மற்றும் அவருக்கு சிகிச்சைகள் மறுக்கப்பட்டதன் விளைவாக முர்ஷி மோசமான நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டார். அது பாரதூரமான மருத்துவப் பிரச்சினைகளை அவரில் ஏற்படுத்தியது.

2019 ஜுன் 19ல் நீதிமன்ற விசாரணைகளின் போது முர்ஷி நீதிமன்றத்தில் மயங்கி விழுந்தார். அதன் தெடராக 2013 முதல் அவர் மீது பிரயோகிக்கப்பட்ட ஈவு இரக்கமற்ற தடுப்புக் காவல் நடைமுறைகள் காரணமாக, நீண்ட காலமாக யாரோடும் எந்தத் தொடர்பும் அற்ற நிலையில் சிறையில் காலத்தைக் கடத்தி வந்த நிலையிலேயே அவர் மரணத்தையும் தழுவினார்.
முர்ஷியின் குடும்பத்தவர்கள் மீதும் நெருக்குதல்களும் அரசியல் பழிவாங்கல்களும் இடம்பெற்றன. முர்ஷியின் சகோதரரான ஒஷாமா முர்ஷி மிகவும் இரகசியமானதோர் இடத்தில் யாருக்கும் தெரியாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அப்துல்லாஹ் என்ற இன்னொரு சகோதரர் மர்மமான முறையில் மரணம் அடைந்த நிலையில் அவரது மரணச் சடங்கில் பங்கேற்ற பின்னரே ஒஷாமாவுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. முர்ஷி மரணம் அடைந்து மூன்றுகாலத்துக்குள் இந்த மரணம் சம்பவித்துள்ளது. ஏனைய குடும்ப அங்கத்தவர்கள் அரச தரப்பால் தொடர்ந்தும் தினசரி நெருக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.

சட்ட விரோத கொலைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் விஷேட அறிக்கையிடல் அதிகாரி டொக்டர் அக்னேஷ் கல்மார்ட் முர்ஷியின் மரணம் அரச தரப்பால் நடத்தப்பட்ட படுகொலை என்று குறிப்பிட்டுள்ளார். அது மட்டும் அல்ல ஜனாதிபதி சிசியின் சிறைக் கூட ஆட்சி மேலும் ஆயிரக் கணக்கான உயிர்களை ஆபத்தான நிலைக்குத் தள்ளி உள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை நிபுணர்கள் பலர் தெரிவித்துள்ளனா. எதிர்க்கட்சியினரை மௌனிக்கச் செய்யும் தந்திரோபாயத்தின் ஒரு அங்கமாக சிறையில் இருப்பவர்களின் உரிமைகள் வேண்டுமென்றே மீறப்படுகின்றன என்று அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

முர்ஷியின் உடல் அதிகாலை வேளையில் அடக்கம் செய்யப்பட்டது. அவரின் நேரடி குடும்ப உறுப்பினர்களும் அவரது சட்டத்தரணி அப்துல் முனீம் அப்துல் மக்சூத் மட்டுமே மரணச் சடங்கில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. அவரது குடும்ப உறுப்பினர்கள் “துர்ரா” சிறைச்சாலை ஆஸ்பத்தியில் ஜனாஸா தொழுகைளை நடத்தினர். எந்த ஒரு ஊடகத்துக்கும் இந்நிகழ்வுகள் பற்றிய செய்திகளை சேகரிக்க அனுமதி கிடைக்கவில்லை. அதேபோல் முர்ஷியின் ஆதரவாளர்கள் எவரும் மரணச் சடங்கில் பங்கேற்க அனுமதிக்கப்படவும் இல்லை. இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தின் முன்னாள் வழிகாட்டிகளில் ஒருவராக இருந்து சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதே மரணத்தை தழுவிய மொஹமட் மஹ்தி என்பவர் உற்பட இன்னும் பல சகோதரத்துவ இயக்க வழிகாட்டிகள் அடக்கம் செய்யப்பட்ட நஸ்ர் நகர அடக்க ஸ்தலத்திலேயே முர்ஷியும் அடக்கம் செய்யப்பட்டார்.

இவ்வாறானதோர் சோகப் பின்னணியில் தான் இன்றைய வீதிப் போராட்டங்கள் மீண்டும் தலைதூக்கி உள்ளன. இந்தப் போராட்டங்களின் விளைவு மத்திய கிழக்கின் தலைவிதியைத் தீர்மானிக்கும். மத்திய கிழக்கில் யுத்தம் ஆனாலும் சரி சமாதானம் ஆனாலும் சரி எகிப்தின் பங்கு அதில் பிரதானமானது.

Post Disclaimer

Disclaimer: எகிப்திய ஜனாதிபதி சிசிக்கு எதிராக நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் : இவற்றின் முடிவே எகிப்தினதும் மத்திய கிழக்கினதும் தலைவிதியைத் தீர்மானிக்கும் - லத்தீப் பாரூக் - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect Latheefarook.com point-of-view

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *